கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரை குளம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரன் கீழச்சாலையில் வசித்து வரும் தங்க சாமி (64) என்பவருடைய இளைய மகள் ஐஸ்வர்யா (27). இவர் பிஎஸ்சி படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமுடி அதிக அளவில் உதிர்ந்து வந்ததாகவும் இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோரிடம் நான் உயிரோடு இருப்பதை விட சாவதே மேல் என்று அடிக்கடி கூறி வந்துள்ளார். இருந்தாலும் பெற்றோர்கள் ஆறுதல் கூறிவந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யாவின் பெற்றோர் வெளியே சென்று இருந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய போது ஐஸ்வர்யாவின் படுக்கை அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
அவர்கள் கதவை நீண்ட நேரமாக தட்டியும் திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
