பெங்களூருவில் இருந்து துமாகுருக்கு காரில் சென்றபோது, பெண்ணை அவருடன் வந்த நபர் கத்தியால் குத்திய நிலையில், காரை வெடிக்கச் செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் வசிக்கும் நாகேந்திரா என்பவர் துமாகுரு செல்ல கார் ஒன்றை புக் செய்துள்ளார். அந்த காரில் ரம்யா உல்லாஸ் (23) என்ற பெண்ணும் பயணம் செய்துள்ளார். காரை பிரவீன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
கார் துமாகுரு அருகில் சென்று கொண்டிருந்தபோது நாகேந்திராவுக்கும், ரம்யாவுக்கும் இடையே திடீரென கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகேந்திரா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரம்யாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரம்யா பலத்த காயமடைந்துள்ளார். முதலில் இதனை கவனிக்காத டிரைவர் பிரவீனிடம், “என்னை நாகேந்திரா கத்தியால் குத்திவிட்டார்; அதுமட்டுமின்றி பையில் வெடிகுண்டும் வைத்துள்ளார்” என்று ரம்யா அலறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் பிரவீன் உடனடியாக காரை நிறுத்தியுள்ளார். கார் நின்றவுடன் ரம்யாவும், டிரைவர் பிரவீனும் காரில் இருந்து கீழே குதித்து தப்பியுள்ளனர். அதற்குள் காரின் உள்ளே இருந்த நாகேந்திரா, தன் கையில் வைத்திருந்த வெடிபொருளை வெடிக்கச் செய்துள்ளார். இதனால் கார் தீப்பற்றி எரிந்து, நாகேந்திரா சம்பவ இடத்திலேயே கருகி சாம்பலானார். காயமடைந்த ரம்யா மற்றும் டிரைவர் பிரவீன் உயிர் தப்பிய நிலையில், டெட்டனேட்டர் உடன்கூடிய நாட்டு வெடிகுண்டை நாகேந்திரா வெடிக்கச் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
