நெல்லை பேட்டை ராம்நகர் பகுதியைச் சேர்ந்த சிவா, செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் தனது வீட்டில் ‘குட்டி’ என்ற வேட்டை நாய் ஒன்றை ஆசையாக வளர்த்து வந்தார். சாதாரண செல்லப்பிராணியாக மட்டுமில்லாமல், அந்த நாய் அவரது குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிப்போனது.
இந்நிலையில், எதிர்பாராத விதமாக அந்த நாய் உயிரிழந்தது. இதனால் மனமுடைந்த சிவா, தனக்கு நெருக்கமான சொந்த சகோதரனை இழந்தது போல் கதறி அழுதார். இந்த பெருந்துயரத்தை தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட அவர், தனது செல்லப்பிராணிக்கு மனிதர்களுக்கு செய்வது போல இறுதிச்சடங்குகளைச் செய்ய முடிவு செய்தார்.
அதன்படி, ‘குட்டி உன்னை தவற விட்டுவிட்டோம். மறக்க முடியாத நினைவு நீ குட்டி எங்கள் சகோதரர்’ என்ற உருக்கமான வாசகத்துடன் கண்ணீர் அஞ்சலி பேனர் ஒன்றை தயார் செய்து தனது பகுதியில் வைத்தார். நாய் ஒன்றுக்காக மனிதர்களுக்கு வைப்பது போல பேனர் வைத்து, கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்திய இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
