உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், திருமணமாகி நான்கே நாட்களான சந்தோஷ் (28) என்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பன்பூர்வா கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு கடந்த ஜூன் 7-ஆம் தேதி தான் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருமண முடிந்து புதுப்பெண்ணுடன் மகிழ்ச்சியாக வீட்டிற்கு வந்த சந்தோஷின் வீட்டில் கொண்டாட்டங்கள் முடிவதற்குள்ளேயே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை கிராமத்திற்கு வெளியே கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு மரத்தில் சந்தோஷின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனைப் பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து குடும்பத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். கணவனின் மரணச் செய்தியைக் கேட்டு கைகளில் உள்ள மருதாணி கூட அழியாத புதுப்பெண் நிலைகுலைந்து போனார். பெற்றோர் மற்றும் உறவினர்களின் கதறல் சத்தம் அந்த கிராமத்தையே உலுக்கியது. தகவல் அறிந்து வந்த ஹண்டியா காவல் நிலைய போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்டமாக இது தற்கொலையாக இருக்கலாம் என்று போலீசார் கருதினாலும், இந்த மரணத்தில் பல மர்மங்கள் நீடிக்கின்றன. சந்தோஷின் மரணத்திற்குப் பிறகு அவரது சகோதரர் சுஷில் திடீரென மாயமாகியுள்ளார், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சந்தோஷின் தாய் தங்களுக்கு அக்கம் பக்கத்தினருடன் சில தகராறுகள் இருந்ததாகக் கூறி, அவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். புதிய வாழ்க்கையைத் தொடங்கிய வாலிபர் நான்கே நாட்களில் ஏன் இந்த முடிவை எடுத்தார் அல்லது இதற்கு பின்னால் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து போலீசார் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
