கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. தங்கள் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த ஒரு தம்பதியினர் வீட்டு உரிமையாளரையே கொடூரமாக கொலை செய்துவிட்டு தங்க நகைகள், தாலி சங்கிலியை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் வயது முதிர்ந்த ஒரு பெண். இவரின் வீட்டில் கொலையாளியான அந்த தம்பதி வாடகைக்கு இருந்த நிலையில் சரியாக வேலை இல்லாததால் ஏற்பட்ட கடுமையான பணத் தேவையே இவர்களை இந்த கொடூர செயலை செய்ய தூண்டியுள்ளது. தங்கள் வீட்டு உரிமையாளரிடம் பணம் மற்றும் நகை இருப்பதை கவனித்த அந்த தம்பதி கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அவரை தாக்கி கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கி மூச்சு திணற செய்து கொலை செய்துள்ளனர். அவருடைய கழுத்தில் இருந்த தங்க தாலி சங்கிலி மற்றும் வீட்டில் இருந்த மற்ற நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். பிறகு அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இறுதியாக விசாரணையில் தலைமறைவாக இருந்த அந்த கொலையாளி தம்பதியை சில நாட்களுக்குள்ளாகவே காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் கைப்பற்றியதாக தெரிகிறது. வாடகைக்கு குடியிருந்த வீட்டு உரிமையாளரை கொலை செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
