மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் மற்றும் துருக்கி மேற்கொண்ட சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங் தற்போது புதிய ‘நான்கு அம்ச சூத்திரத்தை’ முன்வைத்துள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தை தணிக்க ஐக்கிய அரபு அமீரக இளவரசருடனான சந்திப்பின் போது ஜின்பிங் இந்த ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் உலகம் மீண்டும் காட்டுமிராண்டித்தனமான ஆட்சிக்கு திரும்பக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், சக்திவாய்ந்த நாடுகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஈரான் போன்ற இறையாண்மை கொண்ட நாடுகளின் அரசாங்கத்தை அங்கீகரிப்பதன் மூலமே பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்றும் வலியுறுத்தினார்.
இதனால் அமைதியை நிலைநாட்ட ஜின்பிங் முன்வைத்துள்ள இந்த சூத்திரத்தில், நாடுகள் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தக்கூடாது, சதித் திட்டங்களில் ஈடுபடக்கூடாது மற்றும் அழுத்தங்கள் மூலம் அமைதியைக் கொண்டுவருவதை விட நேரடி உரையாடல்களை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரானுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள சீனா, தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சீனப் பயணத்திற்கு முன்னதாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சீனாவின் இந்தத் தலையீடு சர்வதேச அரசியலில் மிக முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.
