கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள கிராமத்தில் வசித்து வரும் தொழிலாளியான ஆனந்த செல்வம் (43) நேற்று காலை ஆழிச்சி குடியிலிருந்து தன் வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெண்ணாடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயதுடைய மாணவி ஒருவர் ஸ்கூட்டரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். முருகன் குடியில் வந்த போது செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மீது மாணவி ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஆனந்த செல்வத்தின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாணவிக்கு ஸ்கூட்டர் ஓட்ட கொடுத்து அவருடைய தாய் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
