கன்னியாகுமரி மாவட்டம் போங்காலை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த மே மாதம் பலத்த காற்று வீசியதால் அப்பகுதியில் உள்ள ரப்பர் மரம் முறிந்து விழுந்தது. இதனால் சுந்தர்ராஜன் வீட்டில் உள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. உடனே மின்வாரிய அலுவலகத்தில் இருந்து வந்த தற்காலிக தொழிலாளி மீட்டரில் பொருத்தாமல் தற்காலிகமாக மின் இணைப்பை சீரமைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் கேட்டபோது, ஒரு சில நாட்களில் மீண்டும் வந்து மீட்டரில் பொருத்தி மின் இணைப்பு வழங்குவதாக கூறி சென்றுள்ளனர். முதற்கட்டமாக தொழிலாளிக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த பணத்தை செலுத்தி விட்டார். சமீபத்தில் மின்வாரிய சிறப்பு அதிகாரிகள் சோதனைக்கு வந்து கூலி தொழிலாளி மின்சாரம் திருடியதாக கூறி 94 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு மின் இணைப்பையும் துண்டித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர்ராஜ் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட தற்காலிக ஊழியரை அடையாளம் காட்டிக் கொடுத்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுமார் 24 நாட்களாக மின் இணைப்பு இல்லாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
அவர்களது வீட்டில் தங்கி இருக்கும் மூதாட்டி மின்சாரம் இல்லாததால் வீட்டிற்குள்ளேயே பலமுறை தவறி விழுந்து காயமடைந்தார். இதனால் கண் பார்வை இழந்த 87 வயது மூதாட்டி உட்பட சுந்தரராஜனின் குடும்பத்தினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
