சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, ரயில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ரயிலில் பயணிக்கும் ஒரு பெண் தன் இருக்கையில் சௌகரியமாக அமர்ந்துகொண்டு, எதைப் பற்றியும் கவலைப்படாமல் கைகளைக் கழுவுகிறார். அவர் ஊற்றும் தண்ணீர் நேரடியாக ரயில் இருக்கையிலும், அதன் வழியாகக் கீழே தரையிலும் கொட்டுகிறது. அதுமட்டுமின்றி, அவரது இருக்கைக்கு அடியில் தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் ஏராளமான குப்பைகள் சிதறிக் கிடக்கின்றன. சக பயணிகளுக்கு அசுத்தத்தை உண்டாக்கும் வகையில் அரங்கேறிய இந்த அலட்சியப் போக்கு, பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
https://www.instagram.com/reel/DaEiDi-MieP/?utm_source=ig_embed&ig_rid=A6iSeBDtyxjAN1vpV2QOJsp
இந்தக் காட்சி முழுவதையும் ரயிலில் இருந்த சக பயணி ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். ‘கர் கே காலேஷ்’ என்ற எக்ஸ் கணக்கில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த அசுத்தங்கள் அனைத்தும் அந்தப் பெண்ணாலும் அவருடன் பயணித்தவர்களாலும் தான் பரப்பப்பட்டதா என்பதை வீடியோவை மட்டும் வைத்து உறுதியாகக் கூற முடியாது என்றாலும், பொதுச் சொத்தைப் பயன்படுத்தும் போது காட்டிய இந்த அலட்சியம் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ரயில்களின் தூய்மை மற்றும் பயணிகளின் தனிப்பட்ட பொறுப்பு குறித்து இணையத்தில் மீண்டும் ஒரு விவாதம் வெடித்துள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகம் தூய்மைப் பணிகளுக்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்தாலும், பொதுமக்களுக்குப் பொறுப்புணர்வும் சுய ஒழுக்கமும் இல்லை என்றால் தூய்மையைப் பராமரிப்பது சாத்தியமில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். “பொதுச் சொத்தை உங்கள் வீடாகக் கருதாதீர்கள்” என்றும், “இப்படிப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்” என்றும் இணையவாசிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
