உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் இரு காளைகள் சாலை ஓரத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் ஒரு பெண் தனது இருசக்கர வாகனத்தில் வழக்கம்போல் சென்று கொண்டிருந்தபோது, சண்டையிட்டுக் கொண்டிருந்த காளைகளில் ஒன்று திடீரென வேகமாகக் குறுக்கே பாய்ந்து வந்து அவரது வாகனத்தின் மீது மோதியது.
ஒரு நபர் சண்டையிட்டுக் கொண்டிருந்த காளைகளை விரட்ட முயன்றபோது, ஒரு காளை திடீரென மிரண்டு வீதியை நோக்கி ஓடியது. அப்போது அந்தப் பெண் யோசிக்கும் முன்பே, காளை அதிவேகமாக ஸ்கூட்டரின் மீது மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி கார் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் அதிர்ச்சி காட்சிகள் இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும், சாலை விபத்துகள் எப்போதும் அதிவேகமாகச் செல்வதால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதையும், இதுபோன்ற எதிர்பாராத தருணங்களில் உயிரைக் காக்க இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது எவ்வளவு அவசியம் என்பதையும் இந்தச் சம்பவம் உணர்த்துவதாக சமூக வலைதளப் பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
