மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோஹாகாட் கோட்டையில், கேதன் அகர்வால் என்ற தொழிலதிபர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சதி அம்பலமாகியுள்ளது. கேதனின் வருங்கால மனைவியான சியா கோயல், தனது கள்ளக்காதலன் சேத்தன் சௌத்ரியுடன் சேர்ந்து கேதனை 400 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டு, அதனை விபத்து போல நாடகமாடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சியா கோயல் மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொடூரமான கொலைத் திட்டத்தை அரங்கேற்றுவதற்காக சியா கோயல் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் திருமணத்திற்கு முந்தைய புகைப்படப் பிடிப்பிற்காக இந்தோனேசியாவின் பாலி தீவுக்குச் செல்லவிருந்தனர். ஆனால், விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் கார் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில், சியா திட்டமிட்டு கேதனின் பாஸ்போர்ட்டை மட்டும் திருடி பயணத்தை ரத்து செய்ய வைத்துள்ளார். பாலி சென்றால் அங்கு கொலை திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் என்பதால், அவர் இந்த சதியை செய்துள்ளார்.
பாலி பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற சாக்கில் கேதனை வற்புறுத்தி லோஹாகாட் கோட்டைக்கு சியா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து கேதனை பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டுள்ளார். ஆரம்பத்தில் இது விபத்து என்று கூறப்பட்டாலும், கேதனின் உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது சியாவிடம் எந்தவொரு சோகமும் இல்லாதது கேதனின் தந்தைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் நடந்த தீவிர போலீஸ் விசாரணையில், சியாவின் கள்ளக்காதல் விவகாரமும், பாஸ்போர்ட் திருட்டு மற்றும் கொலைச் சதியும் முழுமையாக வெளிச்சத்திற்கு வந்தது.
