கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ரமணா நாயக் என்பவர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வருகின்றார். திருமணம் ஆகி ஸ்ருதி (38) என்ற மனைவியும் பூர்விகா (12) என்ற மகளும் உள்ளனர். இதனிடையே ரமணா நேற்று இரவு மருத்துவமனைக்கு பணிக்கு சென்று விட்ட நிலையில் இரவு பணியை நிறைவு செய்துவிட்டு இன்று காலை வீடு திரும்பியுள்ளார். நீண்ட நேரமாக காலிங் பெல்லை அடித்தும் மனைவி மற்றும் மகள் கதவை திறக்கவில்லை. செல்போனில் தொடர்பு கொண்டும் யாரும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த ரமணா பக்கத்து வீட்டார் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மகள் பூர்விகா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் வீட்டில் உள்ள மற்றொரு அறையில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மகள் பூர்விகாவை தாயார் அடித்து கொலை செய்துவிட்டு பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஸ்ருதி கடந்த சில மாதங்களாகவே மனநல பாதிப்பில் இருந்ததாகவும் அதற்காக மருந்துகள் எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
