“என்னை காப்பாத்துங்க”…. ஆரம்ப சுகாதார நிலையத்தில் கதறித் துடித்த பெண்… சாப்பிடப்போன டாக்டர்….. இறுதியில் நடந்த சோகம்….!

By Nanthini on புரட்டாதி 2, 2026

Spread the love

சீர்காழி அருகே பாம்பு கடித்து மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட பெண் ஒருவர், சிகிச்சைக் காலதாமதம் மற்றும் மருத்துவரின் அலட்சியம் காரணமாக உயிரிழந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எடமணல் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அம்சவல்லி (48) என்பவர், தனது வீட்டில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விஷப்பாம்பு கடித்துள்ளது. வலியால் துடித்த அவரை, உறவினர்களும் அப்பகுதி மக்களும் உடனடியாக அருகில் உள்ள எடமணல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனைக்குச் சென்ற அம்சவல்லி, தன்னை விஷப்பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி அழுது கதறி உடனடியாக உயிர் காக்கும் நஞ்சு முறிவுச் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், அங்கிருந்த அரசு மருத்துவர் அவசர சிகிச்சை அளிக்காமல், அவரை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கண்காணிப்பிலேயே வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. நோயாளி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தச் சிக்கலான நேரத்திலேயே, மருத்துவர் உணவருந்துவதற்காகச் சென்றது நோயாளியின் உறவினர்களை மிகுந்த ஆத்திரத்திற்குள்ளாக்கியது.

   

இதனிடையே, மேல் சிகிச்சைக்காகச் சீர்காழி அல்லது மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு மாற்றத் திட்டமிட்டு 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ஆம்புலன்ஸ் உடனடியாக வராமல் நீண்ட நேரம் தாமதமாகவே வந்து சேர்ந்தது. பெரும் போராட்டத்திற்குப் பின் தாமதமாக வந்த ஆம்புலன்ஸில் அவரை ஏற்றிய சில நிமிடங்களிலேயே, நஞ்சின் வீரியம் தாங்காமலும் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமலும் அம்சவல்லி பரிதாபமாக உயிரிழந்தார்.

   

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும் உறவினர்களும், மருத்துவரின் அலட்சியப்போக்கைக் கண்டித்தும் ஆம்புலன்ஸ் தாமதத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் எடமணல் ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து வந்த சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் தலைமையிலான காவல்துறையினரும் வட்டார மருத்துவ அலுவலர்களும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.