தெலுங்கானா மாநிலத்தில் சாலை இணைப்பு இல்லாததால் மருத்துவ சேவையை பெற முடியாமல் கர்ப்பிணி பெண் ஒருவர் சாலையோரத்தில் குழந்தையை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பத்ராத்திரி மாவட்டத்தில் வசித்து வந்த கர்ப்பிணி திடீரென்று கடுமையான பிரசவ வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியை நாடிய நிலையில் கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் அங்கு செல்ல முடியாமல் போனது. வேறு வழி இல்லாமல் கிராம மக்கள் தற்காலிகமாக ஒரு ஸ்ட்ரக்சர் தயார் செய்து அதில் அந்த கர்ப்பிணி பெண்ணை வைத்து காட்டுப்பகுதி வழியாக சுமந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தொடங்கினர்.
ஆனால் பாதி வழியிலேயே பிரசவ வலி தீவிரம் அடைந்ததால் அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்தது. பிறகு கிராம மக்கள் உதவியோடு சாலையோரத்திலேயே அந்தப் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் தாயையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. தற்போது தாயும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சூழல் பலமுறை நடந்து உள்ளதாகவும் அந்த பகுதிக்கு விரைவில் சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்றும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தெலுங்கானா மட்டுமல்லாமல் நாட்டின் பல தொலைதூர கிராமங்களில் இது போன்ற நிலை தான் நிலவி வருகிறது.
