தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதே சமயம் கட்சியில் களை எடுக்கும் பணிகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. இளைஞர் அணியை பலப்படுத்தும் முயற்சியில் உதயநிதி தீவிரம் காட்டி வருகின்றார்.
இந்நிலையில் தேர்தலில் இளைஞர்களை களம் இறக்கத் துடிக்கும் உதயநிதியின் முடிவால் சிட்டிங் அமைச்சர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வயது அடிப்படையில் ஐந்து அமைச்சர்களுக்கும் கட்சியில் நிலவும் உள்ளடி மோதல்களால் மூவருக்கும் சீட் மறுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் இருக்கும் அமைச்சர்கள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்தாலும் காரியம் ஆகவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். அந்த எட்டு அமைச்சர்கள் யாராக இருக்கும் என்பது தற்போது விவாதமாக மாறி உள்ளது.
