அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நாளை மறுநாள் (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைவர் விஜய்யின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தள்ளிப்போய்க்கொண்டிருந்த இந்த இணைப்பு விழா, தற்போது அதற்கான பச்சைக்கொடி காட்டப்பட்டதை அடுத்து இறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் இந்த அதிகாரப்பூர்வ இணைப்பு நடைபெறவுள்ளதால், கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் தமிழக அரசியல் களமே உற்றுநோக்கும் ஒரு பிரமாண்ட கூட்டத்தைக் கூட்டுவதற்கு இரு முன்னாள் அமைச்சர்களும் தீவிரமாகத் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
