தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் வசித்து வரும் ராஜேஸ்வர ராவ் என்பவருக்கு கல்பனா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர், சம்பவத்தன்று மதிய உணவு உண்பதற்காக தனது வீட்டிற்கு வந்தபோது, மனைவி கல்பனா கொரியர் நிறுவன ஊழியரான சைதுலு என்பவருடன் தவறான உறவில் இருந்ததை நேரில் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேச ராஜேஸ்வர ராவ் முடிவு செய்திருந்தார். இதற்கிடையில், தனது தகாத உறவுக்கு தடையாக இருக்கும் கணவரை வீட்டின் வெளியே வைத்து வாகனம் ஏற்றி தீர்த்துக்கட்டுமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கல்பனா தனது காதலனுக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி கொலைச்சதி தீட்டியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் மனைவியின் செல்போனை ஆராய்ந்தபோது இந்த அதிர்ச்சிகரமான சதித்திட்டம் குறித்து ராஜேஸ்வர ராவ் அறிந்துகொண்டார். உடனடியாக கம்மம் காவல் நிலையத்திற்குச் சென்ற அவர், மனைவியின் செல்போனில் இருந்த குறுஞ்செய்தி ஆதாரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் கல்பனா மற்றும் சைதுலு ஆகிய இருவரையும் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
