சேலம் மாவட்டம் ஓமலூர் – சங்ககிரி சாலையில் காரில் பிளை ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தனது கணவரை வழிப்பறி கும்பல் மறித்து வெட்டிக் கொன்றுவிட்டு 12 பவுன் நகையைத் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக அவரது மனைவி சுஜிதாஸ்ரீ கதறி அழுதார். இருப்பினும், பூபதியின் குடும்பத்தினர் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் ஓமலூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சொத்துத் தகராறு, குடும்பப் பிரச்சனை மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாக சுஜிதாஸ்ரீ தனது கணவரைக் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியது அம்பலமானது. நள்ளிரவில் தனது கள்ளக்காதலன் சந்தோஷ்ராஜ் மற்றும் 13 வயது மகனுடன் சேர்ந்து சுஜிதாஸ்ரீ வீட்டிலேயே பூபதியை வெட்டிக் கொன்றது தெரியவந்துள்ளது. அதன்பிறகு, சடலத்தை காரில் ஏற்றிச் சென்று, வழிப்பறி கும்பல் வழிமறித்துக் கொலை செய்ததாக அவர்கள் சினிமா பாணியில் நாடகமாடியதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, கொலைச் செயலில் ஈடுபட்ட சுஜிதாஸ்ரீ, சந்தோஷ்ராஜ் மற்றும் 13 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். சுஜிதாஸ்ரீ சேலம் மத்திய மகளிர் சிறையிலும், சந்தோஷ்ராஜ் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்ட நிலையில், அந்த சிறுவன் சேர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சொந்த மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து அரங்கேற்றிய இந்த கோரச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
