தில்லி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சிக்னல் அருகே புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோர விபத்து ஒன்று நடந்துள்ளது. லோதி சாலையில் உள்ள என்.டி.எம்.சி அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டுத் துவாரகா பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சுக்பீர் சிங் (55) மற்றும் அஞ்சு சிங் (45) ஆகிய இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது இருசக்கர வாகனம் சாலையில் எதிர்பாராதவிதமாகச் சறுக்கி விழுந்த நிலையில், பின்னால் அதிவேகமாக வந்த மஹிந்திரா தார் கார் அவர்கள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தில்லி கன்டோன்மென்ட் காவல் நிலையப் போலீசார், காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய அரியான மாநிலத்தைச் சேர்ந்த பூபேந்திரன் (26) என்பவரைக் கைது செய்தனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், விபத்தின் பின்னணி குறித்துச் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
