திண்டுக்கல் மாவட்டம் உடையாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 49 வயதான சுகராஜ், அங்குள்ள ஒரு தனியார் நூற்பாலையில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பகல் முழுக்க உழைத்துவிட்டு இரவு வீட்டுக்கு வரும் சுகராஜுக்கும், அவரது மனைவி முருகேஸ்வரிக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே ஏதோ ஒரு குடும்ப விஷயம் தொடர்பாகத் தொடர் புகைச்சல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும், கடுமையான சண்டைகளும் வெடித்துள்ளன.
வழக்கம்போல நேற்றைய தினமும் கணவன், மனைவிக்கு இடையே வீட்டில் திடீரென வாக்குவாதம் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய அந்த வார்த்தை போர், நேரம் செல்ல செல்ல இருவருக்குள்ளும் இருந்த ஆத்திரத்தை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற முருகேஸ்வரி, சமையலறைக்குள் ஓடிச் சென்று அங்கிருந்த கனமான இரும்பு தோசைக்கல்லை தூக்கி வந்து, கணவர் சுகராஜின் தலையிலேயே ஓங்கி அடித்துள்ளார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத சுகராஜ் மண்டை உடைந்து, ரத்த வெள்ளத்தில் சரிந்து, அலறுவதற்குக் கூட நேரமில்லாமல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கணவன் பிணமாகக் கிடப்பதைப் பார்த்த பின்பே தான் செய்த கொடூரத்தின் வீரியத்தை உணர்ந்த முருகேஸ்வரி பயத்தில் உறைந்து போனார். எனினும் தப்பியோட நினைக்காமல், நேராக வடமதுரை காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். தகவலறிந்து வேடசந்தூர் டிஎஸ்பி பவித்ரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலைக் கைப்பற்றியதோடு, கொலைக்குப் பயன்படுத்திய தோசைக்கல்லையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாதாரண குடும்பச் சண்டை ஒரு உயிரைப் பறித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
