இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் ‘இன்பத் திருமணம்’ (Pleasure Marriage) அல்லது தற்காலிகத் திருமண கலாச்சாரம் சுற்றுலாப் பயணிகளிடையே வேகமாகப் பரவி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள உள்ளூர் பெண்களுக்குப் பணம் கொடுத்து சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை தங்களது ‘வாடகை மனைவியாக’ இருக்க ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர். வறுமையில் வாடும் பெண்களுக்கு இது ஒரு வருமான வாய்ப்பாகப் பார்க்கப்பட்டாலும், இது ஒரு தார்மீக ரீதியான விவாதத்தை உலகளவில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி மனைவியாக இருப்பவர்கள் உடலுறவு கொள்வதோடு மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாகவும், சமையல் செய்பவராகவும், வீட்டு வேலைகளைக் கவனிப்பவராகவும் செயல்படுகின்றனர். இதற்கான கட்டணம் பெண்ணின் வயது, அழகு, கல்வித் தகுதி மற்றும் ஒப்பந்த காலத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. இதுவரை கிடைத்த தகவல்களின்படி, இந்த வாடகைத் திருமணத்திற்காக சுமார் 1.33 லட்சம் ரூபாய் முதல் 96 லட்சம் ரூபாய் வரை பணம் கைமாறுவதாகச் சொல்லப்படுகிறது.
ஒப்பந்தக் காலம் முடிந்தவுடன் இருவரும் தங்களது பாதையில் பிரிந்து சென்றுவிடுவார்கள். இருப்பினும், சில நேரங்களில் இந்தத் தற்காலிக உறவு நெருக்கமாகி, சுற்றுலாப் பயணிகள் அந்தப் பெண்ணையே நிரந்தரமாகத் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. அவ்வாறு இல்லையெனில், அந்தப் பெண்ணின் எதிர்கால முன்னேற்றத்திற்காகத் தேவையான நிதி உதவிகளைச் செய்துவிட்டுச் செல்கின்றனர். இந்த வினோத கலாச்சாரம் சுற்றுலாத் துறையின் மற்றொரு நிழல் முகமாகவே பார்க்கப்படுகிறது.
