தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின விழாவில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்துகொண்டு நடிகர் விஜய்யின் திரைப்படப் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு ஊழியராக இருந்துகொண்டு அரசியல் கட்சி நடத்தும் பொது நிகழ்ச்சியில் மேடையேறி நடனமாடியது, அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை மீறிய செயலாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக, துறை ரீதியான விசாரணைக்குப் பிறகு தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணியை பணியிடை நீக்கம் (Sustension) செய்து தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் அரசியல் சார்ந்த பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது அரசியல் கட்சி மேடைகளிலோ பங்கெடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித பாரபட்சமுமின்றி கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சமூகத்தின் வழிகாட்டிகளாக இருப்பதால், அவர்களின் செயல்பாடுகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு கண்ணியமாக அமைய வேண்டும் என்பதை இந்த நடவடிக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
