குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள் ஏற்படுவது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு கிணற்று நீர் தானாகவே அலைபோல் கொந்தளித்ததால், இதைக் காண ஏராளமான கிராம மக்கள் குவிந்தனர்.
இந்த பகுதி நிலநடுக்க அபாயம் உள்ள பகுதி என்பதால், நிலத்தடி புவியியல் மாற்றங்கள் காரணமாகவே நீர் இவ்வாறு அசையக்கூடும் என உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர். இருப்பினும், இது தொடர்பாக அறிவியல் நிறுவனங்களோ அல்லது அரசு நிர்வாகமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
நிலத்தடி நீர் அழுத்தம் அதிகரிப்பது அல்லது நிலத்தடியில் இருந்து ரேடான் அல்லது மீத்தேன் போன்ற வாயுக்கள் கசிவது இதன் பின்னணியில் உள்ள காரணங்களாக இருக்கலாம் என புவியியலாளர்கள் கணித்துள்ளனர். இருப்பினும், முறையான அறிவியல் ஆய்வுக்கு பிறகே இதற்கான உண்மையான காரணம் தெரியவரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
