ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஃபேஸ்புக் தளம் வாயிலாகக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 8-ஆம் தேதி பிரதமர் மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா செல்லவிருக்கும் நிலையில், இந்த மிரட்டல் வெளியாகியுள்ளது. பாதுகாப்புப் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்து, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
‘அபு முஸ்தபா’ என்ற பெயரிலான சமூக ஊடகக் கணக்கிலிருந்து இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தை ஆஸ்திரேலியப் போலீஸார் மிகத் தீவிரமான வழக்காகக் கையில் எடுத்துள்ளனர். மிரட்டல் விடுத்த நபர் யார், அவரது பின்னணி என்ன என்பது குறித்தும், இதன் பின்னணியில் ஏதேனும் சதித்திட்டங்கள் உள்ளனவா என்பது குறித்தும் ஆஸ்திரேலியப் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
