மும்பையின் பய்துனி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, தற்போது தீவிர விசாரணைக் கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், இது கொலையா, தற்கொலையா அல்லது தற்செயலாக நடந்த விபத்தா என்பதை போலீசாரால் இன்னும் துல்லியமாகக் கண்டறிய முடியவில்லை. இந்தச் சூழலில், உயிரிழந்தவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவர்கள் வீட்டில் பயன்படுத்திய உப்பின் மாதிரிகள் மீண்டும் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக நடத்தப்பட்ட தடயவியல் சோதனையில், அக்குடும்பத்தினர் சாப்பிட்ட தர்பூசணிப் பழத்தில் ‘ஜின்க் பாஸ்பைடு’ எனப்படும் எலி விஷத்தின் கலப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மேலும், ஜே.ஜே. மருத்துவமனையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும், இந்த விஷ பாதிப்பு காரணமாகவே நான்கு பேரும் உயிரிழந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, தர்பூசணியில் உப்பு தூவி சாப்பிடும் வழக்கத்தைக் கொண்ட அந்தப் பகுதியில், உப்பில் இந்த விஷப் பொடி கலக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் பலமாகச் சந்தேகிக்கின்றனர்.
இந்த மர்ம மரணம் தொடர்பாக மும்பை போலீசார் இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களில் யாராவது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் உணவில் விஷம் கலந்தார்களா, அல்லது வெளிநபர் எவரேனும் சதித்திட்டம் தீட்டி இதைக் செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது. மேலும், விஷம் கலக்கப் பயன்படுத்தப்பட்ட அசல் டப்பாவை யாரோ திட்டமிட்டு மறைத்திருப்பதாகவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதால், இந்த உப்பின் மறுபரிசோதனை அறிக்கை வழக்கின் முக்கிய திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
