உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தின் முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த ‘கார்கி’ என்ற முர்ரா இன எருமை மாடு, அதிக பால் உற்பத்தி செய்து ஒட்டுமொத்த மாநிலத்திலும் புதிய சாதனையைப் படைத்துள்ளது. லக்னோவிலிருந்து வந்த நிபுணர் குழுவின் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட்ட பால் உற்பத்தித் திறனுக்கான சோதனையில், இந்த எருமை மாடு ஒரு நாளைக்கு 23.375 லிட்டர் பால் கொடுத்து உத்தரபிரதேச மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த அசாத்திய சாதனைக்காக உத்திரபிரதேச வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு சங்கத்தினர் இதன் உரிமையாளரான சௌத்ரி விக்ரம் சிங்கின் குடும்பத்தினருக்குக் கோப்பை வழங்கிப் பாராட்டியுள்ளனர்.
சுமார் 4 வயதுடைய இந்த கார்கி எருமை மாடு, 5.5 அடி உயரத்துடன் பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த மாட்டின் உரிமையாளர் சேகர் சவுகான் மற்றும் அவரது தந்தை விக்ரம் சிங் ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து மேற்கொண்ட கடின உழைப்பாலும், முறையான இனப்பெருக்க (Breeding) முயற்சியினாலும் தான் இந்த வெற்றியை எட்ட முடிந்துள்ளது. ஹரியானாவின் புகழ்பெற்ற ‘பீம்’ என்ற முர்ரா இன எருமையின் மூலம் இந்த கார்கி எருமை மாட்டின் இனம் மேம்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளது.
தற்போது கார்கி எருமை மாடு மாதத்திற்குச் சுமார் 50,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டித் தருகிறது. இதன் அபாரமான பால் உற்பத்தித் திறன் மற்றும் பிரம்மாண்ட தோற்றத்தைக் கண்டு வியந்த பல வியாபாரிகள் இந்த எருமை மாட்டை 20 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்க முன்வந்துள்ளனர். இருப்பினும், கார்கி தங்களின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவும், தங்களது அடையாளமாகவும் மாறிவிட்டதால், இதனை எவ்வளவு பணம் கொடுத்தாலும் விற்கப்போவதில்லை என்று அதன் உரிமையாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
