சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் முன்பாக, அக்கட்சியின் தொண்டர் ஒருவர் கத்தியுடன் தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. “விஜய் தான் அடுத்த முதல்வர், அவர் முதலமைச்சர் ஆகவில்லை என்றால் நான் செத்துவிடுவேன், எல்லோரையும் கொன்றுவிடுவேன்” என்று கத்தியபடி அந்த நபர் ரகளையில் ஈடுபட்டார்.
அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் போலீசார் அந்த நபரைத் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதுடன், “பெண்கள் சிலர் என் மூளையை மாற்றிவிட்டார்கள்” என்று வினோதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
தொடர் விசாரணையில், அவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. போலீசார் அவரைப் பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த கட்சி அலுவலகம் முன்பு கத்தியுடன் ஒருவர் மிரட்டல் விடுத்த இச்சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை உருவாக்கியது.
