தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மீண்டும் தங்கள் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற நிலைப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருவது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூடுதல் தொகுதிகளை கேட்டு வருவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறினால் விமர்சனங்கள் இருக்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், நாம் திமுகவிலிருந்து விலகினால் மற்றவர்களுக்கு ஒரு இலக்காகவே இருக்க மாட்டோம். அவர்களின் வேலை முடிந்து விடும். அவர்களின் செயல்திட்டம் நிறைவேறிவிடும். நம் மீது இத்தனை விமர்சனங்கள் வருவதற்கு காரணம், நாம் அதிமுக பக்கம் போகவில்லையே, பாஜகவோடு உறவாடவில்லையே என்பதுதான். இதுதான் அவர்களின் பிரச்சனை என்று திருமாவளவன் பேசியுள்ளார்.
