தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் எடுக்கப்பட்ட மங்கலம் என்ற யானையின் நெகிழ்ச்சியான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தற்பொழுது அதிவேகமாக வைரலாகி வருகிறது. நெற்றியில் திலகமும், கழுத்தில் மணியும் அணிந்து கம்பீரமாக நிற்கும் அந்த யானைக்கு அதன் பாகன் காலில் மசாஜ் செய்து விடுகிறார். மங்கலம் அதனை மிகுந்த மகிழ்ச்சியோடு அனுபவிப்பதோடு மட்டுமல்லாமல், ஒரு காலில் மசாஜ் முடிந்தவுடன் தனது மற்றொரு காலை ஒரு விஐபி-யைப் போல நீட்டி, அங்கேயும் மசாஜ் செய்யச் சொல்லி மனிதர்களைப் போலச் செய்கை செய்கிறது. யானையின் இந்த மழலைத்தனமான குறும்பு இணையவாசிகளின் இதயங்களைக் கொள்ளையடித்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் @lifewshroots என்ற கணக்கில் “பெரிய உடல், ஆனால் குழந்தைத்தனமான இதயம்” என்ற தலைப்புடன் பகிரப்பட்ட இந்த வேடிக்கையான காணொளி, இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், “யானைகள் உண்மையிலேயே மிகவும் புத்திசாலியான மற்றும் பாசமான விலங்குகள்” என்றும், இந்த அழகான காணொளி தங்களது நாளை மிகவும் இனிமையாக்கிவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் கமெண்ட் செய்து அன்பைப் பொழிந்து வருகின்றனர்.
