இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்னதான் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருந்தாலும் பல கிராமங்களில் இன்றும் மூடநம்பிக்கைகளை பின்பற்றி வருகிறார்கள். இப்படியான நிலையில் அமானுஷ்ய சடங்குகள் செய்ததாக ஒரே குடும்பத்தினரை சேர்ந்த ஐந்து பேரை கிராமத்தினர் ஒன்று சேர்ந்து கொடூரமாக அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பீகார் மாநிலம் பூர்ணிமா என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணம் நடந்துள்ளது. இதற்கு காரணம் ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் அமானுஷ்ய சடங்குகள் செய்ததுதான் என ஊர் மக்கள் நம்பினர்.
இதனால் அந்த குடும்பத்தினரை தீர்த்து கட்ட முடிவு செய்த நிலையில் நேற்று கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து அந்த வீட்டிற்குச் சென்று பாபுலால் ஒரான், சீதாதேவி, மஞ்சித் ஒரான், ராணியா தேவி, டாப்டோ ஆகியோரை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். அத்துடன் அவர்களுடைய ஆத்திரம் தீராததால் பிறகு 5 பேரையும் ஒன்றாக சேர்த்து எரித்துள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்த குழந்தை ஒன்று எப்படியோ தப்பித்து போலீசில் தனது குடும்பத்தினருக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. இந்த சம்பவம் போலீசாருக்கு தெரிய வந்ததால் கிராமத்தினர் வீடுகளை காலி செய்து வெளியேறிவிட்டனர். போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
