தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சேலம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசி வருகிறார். தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற அரசியல் கணக்கு, தன்னுடைய வருகைக்குப் பிறகு ஒருபோதும் பலிக்காது எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் கொடுக்கும் பணத்தை சந்தோஷமாக வாங்கிக் கொள்ளுங்கள், ஏனெனில் அது உங்கள் பணம் தான்; ஆனால் பணத்தை வாங்கிவிட்டு அவர்களின் காதுகளில் விசிலை ஊதி ஏமாறாமல் அனுப்பி வையுங்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அவர், ஜனநாயகத்தை விலைபேசும் இத்தகைய செயல்களுக்கு மக்கள் இடங்கொடுக்கக் கூடாது என வலியுறுத்தினார். மேலும், பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிக்கும் முறைக்கு எதிராக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட விஜய், நேர்மையான அரசியல் மாற்றத்திற்கான அவசியத்தை இந்த உரையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
