“அவுட் ஆப் கண்ட்ரோல்”…திமுக ஆட்சியை அதே பாணியில் வறுத்தெடுத்த விஜய்…. சேலத்தில் ஸ்டாலினை தெறிக்கவிட்ட தளபதி…!

By Nanthini on மாசி 13, 2026

Spread the love

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆற்றிய அதிரடி உரை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை அரசியலில் அனுபவம் இல்லாதவர் என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்த அவர், கட்சி தொடங்கி வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே தவெக ஒரு முதன்மை சக்தியாக உருவெடுத்துள்ளதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், தனது கட்சிக்கு தற்போது 30 சதவீத வாக்கு வங்கி இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனித்து நின்று இவ்வளவு பெரிய ஆதரவைப் பெற மற்றவர்களுக்குத் துணிச்சல் இருக்கிறதா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

திமுக தலைமையிலான தற்போதைய அரசைக் கடுமையாகச் சாடிய விஜய், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர் நலன் என அனைத்தும் ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ (Out of Control) நிலையில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை நோக்கிப் பயன்படுத்தும் அதே வாசகத்தை, அவரது ஆட்சிக்கே திருப்பித் தந்து விமர்சித்தார். தமிழக மக்கள் அனைவரும் தனது குடும்ப உறுப்பினர்கள் என்றும், தமிழ்நாடுதான் தனது வீடு என்றும் உணர்ச்சிகரமாகப் பேசிய அவர், மக்களின் நீதிக்காகவே தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

   

தவெக கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி முட்டுக்கட்டை போடுவதாகக் குறிப்பிட்ட விஜய், மற்ற கட்சிகளுக்குக் கிடைக்கும் சலுகைகள் தங்களுக்கு மறுக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். “எதில் நம்மை கிண்டல் செய்கிறார்களோ, அங்கிருந்துதான் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற உத்வேகம் எனக்கு வரும்” என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் நேரத்தில் மற்ற கட்சிகள் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும், ஆனால் வாக்களிக்கும் போது நேர்மையாகச் செயல்படுமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

   

தனது அரசியல் கொள்கை என்பது ‘மக்களை நேசிக்கும் அரசியல்’ என்று விளக்கிய விஜய், தான் யாரையும் அழிக்க வரவில்லை என்றும், நல்ல அரசியலை முன்னெடுக்கவே வந்துள்ளதாகவும் கூறினார். ஊழல் மற்றும் கொள்ளை அரசியலுக்கு மாற்றாக, கொள்கை வழி நின்றே தமிழக வெற்றிக் கழகம் செயல்படும் என்று உறுதிபடத் தெரிவித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாகத் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.