தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.
எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள்.

ஆனாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு 80 களிலும் 90 களிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார். அதன் பின்னர் அவருடன் நடிக்காத முன்னணி நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். 2000 களுக்குப் பிறகு விஜயகாந்த் மெல்ல மெல்ல தன்னுடைய மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் அவர் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு சென்றார். விஜயகாந்த் மொத்தமாக 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் ஒரு படம் கூட தமிழில்லாத பிற மொழிப் படங்கள் இல்லை.
அதே போல அவர் வில்லனாக நடித்தது ஒரே ஒரு படத்தில்தான். அவரின் முதல் படமான ‘இனிக்கும் இளமை’ படத்தில் வில்லனாக அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அதே போல 1982 ஆம் ஆண்டு வெளியான ஓம் சக்தி என்ற படத்தில் ஆண்ட்டி ஹீரோவாக நடித்திருந்தார். மற்ற அனைத்துப் படங்களிலும் கதாநாயகனாகவோ அல்லது கௌரவ வேடத்திலோதான் நடித்திருப்பார்.
