தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் திமுக ஆட்சியை தமிழகத்தில் அமைத்து விடலாம் என்ற நம்பிக்கையோடு கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை தங்கள் ஆட்சி தான் அமையும் என்ற நிலைப்பாடோடு உள்ளது. இவர்களுக்கு நடுவே மக்களுக்கு புதிய விடியலை தரப்போகிறேன் என்று நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். சமீபத்தில் TVK இரண்டாவது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் திமுக தான் தங்களுக்கு ஒரே எதிரி எனவும் விஜய் கூறியிருந்தார். தற்போது முழுமையாக விஜய் அரசியலில் களமிறங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறார்.
இந்நிலையில் விஜய் தனது முதல் தேர்தல் பரப்புரையை வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கத்தில் தொடங்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து N.ஆனந்த் திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஏற்கனவே இரண்டு மாநில மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள போதிலும் தேர்தல் பரப்புரை களத்தில், அதுவும் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் (2011 தேர்தலில்) தொகுதியில் முதல்முறையாக விஜய் கால் பதிக்க உள்ளார்.
