தஞ்சாவூர் செங்கிப்பட்டி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், “தவெகதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் தவெக” என அதிரடியாக முழங்கினார். அரசியல் களத்தில் உள்ள பல்வேறு அணிகளைச் சுட்டிக்காட்டிய அவர், “இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி என எந்த அணியாக இருந்தாலும் அவர்களை தவெக அடித்து நொறுக்கும்” எனச் சூளுரைத்தார். மேலும், தமக்கும் மக்களுக்குமான உறவு என்பது வெறும் தேர்தலுக்காக உருவானது அல்ல என்றும், அது உணர்வுப்பூர்வமான “எமோஷனல் பந்தம்” என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்த விஜய், “ஓம் சக்தி, பரா சக்தி, திமுக ஒரு தீய சக்தி என இப்போது சின்னப் பசங்க கூட சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்” என்று கூறி அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பினார். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அஞ்சப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்திய அவர், வரவிருக்கும் தேர்தலில் தவெக மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையைத் தனது பேச்சின் மூலம் தொண்டர்களிடையே விதைத்துள்ளார்.
