சட்டசபையில் அரங்கேறிய அதிசயம்… “நானும் விஜய்யும் ஒன்னா படிச்சவங்க”… உதயநிதி சொன்னதும் முதல்வர் செய்த ரியாக்ஷன்….!

By Nanthini on வைகாசி 12, 2026

Spread the love

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகவும், துறையூர் எம்.எல்.ஏ ரவிசங்கர் துணை சபாநாயகராகவும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய சபாநாயகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபை முன்னவர் செங்கோட்டையன் ஆகியோர் மரபுப்படி சபாநாயகர் இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். இந்த நிகழ்வு தவெக ஆட்சியின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

சபாநாயகர் பதவியேற்றதைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபையில் கலகலப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர், “முதலமைச்சரும் (விஜய்), நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள்” என்று குறிப்பிட்டவுடன், முதல்வர் விஜய் முகம் மலரப் புன்னகைத்தார். இவர்களின் பழைய நட்பு மற்றும் கல்லூரி கால நினைவுகளை நினைவுபடுத்தும் விதமாக அமைந்த இந்த பேச்சு, சபையில் இருந்த மற்ற உறுப்பினர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

   

உதயநிதி ஸ்டாலின் தனது உரையில் வாழ்த்துகளோடு சில அரசியல் ஆலோசனைகளையும் முன்வைத்தார். “நாங்கள் ஒரே கல்லூரியில் பயின்றவர்கள் என்றாலும், அரசு நிர்வாகத்தைப் பொறுத்தவரை திமு கழகம் தான் சீனியர். 1967-லேயே ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நீண்ட அனுபவம் எங்களுக்கு உண்டு. எங்களது அறிவையும், அனுபவத்தையும் இந்த அரசுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்; அதனை ஏற்றுக்கொள்வதற்கு நீங்களும் தயாராக இருங்கள்” என்று நாகரிகமான முறையில் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தினார்.

   

சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடையே நிலவிய இந்த ஆரோக்கியமான உரையாடல் தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றத்தைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, முதல்வர் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையேயான அந்தத் நட்புப் பூர்வமான தருணம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையின் கீழ் சட்டசபை நடவடிக்கைகள் இனிதே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.