விஜய் அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள்?… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்… அந்த 4 பேர் யார்…?

By Nanthini on வைகாசி 12, 2026

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று, அதன் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிமுக கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. வெறும் 47 இடங்களை மட்டும் பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுகவில், தற்போது தலைமை மாற்றக் கோரிக்கை வலுத்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு தரப்பும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான மற்றொரு தரப்பும் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருவது அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தனது பதவியை விட்டுக் கொடுக்க மறுக்கும் நிலையில், சி.வி. சண்முகம் தரப்பினர் தங்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசு கோரவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆதரவு அளித்து, ஆளும் அமைச்சரவையில் இடம்பெற சி.வி. சண்முகம் தரப்பு விரும்புவதாகத் தெரிகிறது. அதன்படி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 24 அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் விஜயை இன்று நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

   

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியும், துணைத் தலைவராக ஹரியும், செயலாளராக காமராஜும், கொறடாவாக சி. விஜயபாஸ்கரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, தவெக அமைச்சரவையில் அதிமுக சார்பில் நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், இசக்கி சுப்பையா மற்றும் லீமா ரோஸ் அல்லது மரகதம் குமரவேல் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என உத்தேசமாக எதிர்பார்க்கப்படுகிறது.

   

அதிமுகவில் பிளவு இல்லை என்று வேலுமணியும், சண்முகமும் ஒருபுறம் கூறி வந்தாலும், சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் தனித்தனியாகப் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பிளவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தத் திடீர் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. அதிமுகவின் ஒரு பலமான தரப்பு தவெக அரசுடன் கைகோர்ப்பது, வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்கும் அதிமுகவின் உட்கட்சிப் பூசலுக்கும் ஒரு முற்றுப்புள்ளியாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.