பிரபல நடிகரான விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். நடிகர்களுக்கு ஐம்பதாவது படம் என்றாலே ஸ்பெஷல் தான். அந்த வகையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படமான மகாராஜா படம் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் நட்டி நட்ராஜ், அபிராமி, திவ்யபாரதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப் வில்லனாக மிரட்டி இருக்கிறார் படத்தில் விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பு மக்களை கவர்ந்துள்ளது. சமீப காலமாக விஜய் சேதுபதி வில்லனாக அசத்துகிறார். ஆனால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் அவ்வளவு வரவேற்பை வரவில்லை. இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகாராஜா படம் ரிலீஸ் ஆகி விமர்சனங்களை பெற்றுள்ளது.

அது மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. முதல் நாளில் மகாராஜா உலக அளவில் 7 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இரண்டாம் நாளில் 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 2024-ஆம் ஆண்டு ரிலீசான படங்களிலேயே முதல் நாள் அதிக டிக்கெட் விற்பனையானது மகாராஜா படத்திற்கு தான். ஒரு படத்திற்கு விஜய் சேதுபதி 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

மகாராஜா படத்திற்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்கியிருப்பார் என்ற தகவல் வெளியாகவில்லை. இது பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி இன்னும் நான் பல படத்துக்கு அட்வான்ஸ் தவிர வேறு எதுவுமே வாங்காமல் நடித்துக் கொடுத்து வருகிறேன். சம்பளம் கூட சிலர் சரியாக கொடுப்பதில்லை. தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு பணம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை என கூறியுள்ளார்.

