தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை நோக்கிய நகர்வாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு சட்டப்பேரவையில் 144 வாக்குகளுடன் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இந்த வெற்றி வெறும் எண்களின் விளையாட்டு மட்டுமல்ல; தமிழகத்தின் அதிகார மையத்தை மொத்தமாகத் தன் வசம் ஈர்த்துள்ள விஜய்யின் நுணுக்கமான அரசியல் நகர்வாகும். அதிமுகவில் ஏற்பட்ட பிளவு மற்றும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்களின் நேரடி ஆதரவு, விஜய்யை பிற கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுவித்துள்ளது.
இந்த ‘மெகா மெஜாரிட்டி’ பலம் கிடைத்த அடுத்த கணமே, நிர்வாக ரீதியிலான அதிரடிகளில் விஜய் இறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற முக்கிய டெண்டர்கள், மணல் குவாரி ஒதுக்கீடுகள் மற்றும் துறை சார்ந்த முறைகேடுகளைக் கண்டறியத் தனிப்படை அமைக்க அவர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுவரை கூட்டணி தர்மம் கருதி அடக்கி வாசித்த அரசு, இனி எவ்வித தயக்கமுமின்றி தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஏவிவிடத் தயாராகிவிட்டது என்பதையே இது காட்டுகிறது.
திமுகவின் முக்கியப் புள்ளிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான பழைய புகார்களை மீண்டும் தூசி தட்ட அரசு முடிவெடுத்துள்ள நிலையில், விரைவில் அதிரடி சோதனைகளும் கைதுகளும் அரங்கேற வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. “விசாரணைக்கு ஒத்துழைக்காதவர்கள்” எனும் அடிப்படையில் சட்டத்தின் பிடியை இறுக்க விஜய் திட்டமிட்டுள்ளதால், கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. 144 எம்.எல்.ஏக்களின் பலம் இருப்பதால், சட்டப்பேரவையில் எவ்வித முட்டுக்கட்டையுமின்றி தீர்மானங்களை நிறைவேற்றவும், கடுமையான சட்டங்களை அமல்படுத்தவும் விஜய்க்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், எடப்பாடி பழனிசாமி தரப்பின் பலத்தைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் போன்ற கட்சிகளின் “பேரம் பேசும் சக்தியை” விஜய் முற்றிலுமாக முடக்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த விஸ்வரூபம், வரும் நாட்களில் தமிழக அரசியலில் ஒரு பெரும் புயலைக் கிளப்பப் போவது உறுதி. இனி வரும் காலம் வெறும் பெயரளவிலான ஆட்சியாக இல்லாமல், விஜய்யின் நேரடி “ஆக்சன் பீரியட்” ஆக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
