தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் விஜய், அனுபவம் வாய்ந்த பழைய முகங்களையும் துடிப்பான புதியவர்களையும் இணைத்து ஒரு ‘பலமான கலவையை’ களம் இறக்கியுள்ளார். குறிப்பாக, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் விஜய் நேரடியாகப் போட்டியிடுவது அவரது அரசியல் துணிச்சலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலின் முக்கிய அம்சமே, அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் இருந்து முக்கியப் புள்ளிகள் தவெக பக்கம் சாய்ந்திருப்பதுதான். அதிமுகவின் தூண்களாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஜே.சி.டி. பிரபாகர், சி.டி.ஆர். நிர்மல் குமார் போன்ற சீனியர்கள் இப்போது விஜய்யின் தளபதிகளாக களம் காண்கின்றனர். கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை குறிவைத்து, அக்கட்சியின் முன்னாள் நிர்வாகிகளுக்கு தவெக முன்னுரிமை அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவின் கோட்டையான கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவை விஜய் நிறுத்தியிருப்பது ஒரு ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ ஆகப் பார்க்கப்படுகிறது. வேட்பாளர் தேர்வில் வெறும் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்காமல் 23 பெண்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் எனப் படித்த இளைஞர்களுக்கும், அரசியல் அனுபவம் மிக்கவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் போட்டியிடுவது அக்கட்சியின் திட்டமிடலை உறுதிப்படுத்துகிறது.
இருப்பினும், மற்ற கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்களே தவெக-வில் தஞ்சம் புகுந்துள்ளனரா அல்லது விஜய்யின் கொள்கை ஈர்ப்பால் வந்தார்களா என்ற விவாதம் ஒருபுறம் அனல் பறக்கிறது. திராவிடக் கட்சிகளின் கோட்டைகளைத் தகர்க்கும் நோக்கில் விஜய் எடுத்துள்ள இந்த ‘ஆபரேஷன்’ வியூகம், வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பதை வாக்காளர்களின் தீர்ப்பே தீர்மானிக்கும்.
