தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் பொதுக்கூட்டத்தில் நேரிட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சுமார் ஏழு மணி நேரம் நீடித்த இந்த விசாரணையின் போது, கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அசம்பாவிதம் நடந்த நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் துருவித் துருவிப் பல கேள்விகளைக் கேட்டனர்.
போலீசாரின் எச்சரிக்கையைத் தான் மீறவில்லை என்றும், முறையான அறிவுறுத்தல்கள் முன்கூட்டியே வழங்கப்பட்டிருந்தால் அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம் என்றும் விஜய் தனது தரப்பு நியாயங்களைப் பதிவு செய்துள்ளார். விசாரணையின் ஒரு கட்டத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் குடும்ப நிலை குறித்து அதிகாரிகள் கேட்டபோது விஜய் மிகுந்த மனவேதனையுடன் கண்கலங்கினார். அவரை சிறிது நேரம் அதிகாரிகள் தேற்றியுள்ளனர்.
மதிய உணவைத் தவிர்த்துவிட்டுத் தன் பையிலிருந்த பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிட்டு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அவரது எளிமை அதிகாரிகளை வியக்க வைத்தது. எப்போது அழைத்தாலும் மீண்டும் ஆஜராகத் தயாராக இருப்பதாகக் கூறிவிட்டுத் திரும்பிய அவருக்கு, ஜனவரி 19-ஆம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு சிபிஐ அடுத்த சம்மனை அனுப்பியுள்ளது.
