தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் விவாகரத்து வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா தரப்பில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விஜய் தரப்பிலிருந்து இதுவரை அதற்கு எதிராகவோ அல்லது தனியாகவோ எந்தவொரு மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. முதலமைச்சர் விஜய்யின் இந்த மௌனம், அவர் இந்த உறவை முறித்துக் கொள்ள விரும்பாமல், குடும்பத்தினருடன் பேசி தீர்க்க விரும்புவதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.
இன்றைய விசாரணையின் போது, வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராகக் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இருவரின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் (E-mail) முகவரிகளை முதலில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த கட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. விஜய் முதலமைச்சராக இருப்பதால் அவரது பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அடுத்த விசாரணையின் போது பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இல்லாத ‘இன்-கேமரா’ முறையில், மூடிய தனி அறையில் இருவருக்கும் கவுன்சிலிங் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக இரு பிள்ளைகளுடன் வாழ்ந்த இத்தம்பதியரின் பிரிவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதிமன்ற விவரங்கள் மூலம் தெரியவருகிறது. அவசரப்பட்டுப் பிரித்துவிடாமல் சேர்த்து வைக்க முயலும் குடும்ப நல நீதிமன்றத்தின் நோக்கப்படியும், விஜய் ஏற்கனவே எடுத்து வரும் சமாதான முயற்சிகளின் படியும் சுமுக முடிவு எட்டப்படலாம். ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் இரு குடும்பத்துப் பெரியவர்களும் பேசி நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்பதே நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
