அமெரிக்காவைச் சேர்ந்த விக்டோரியா என்ற பெண்ணுக்கு அவரது மருத்துவர் பரிந்துரைத்த வெறும் ஆறு மாத்திரைகளின் விலை, அந்நாட்டு மருத்துவக் காப்பீடு ஏற்க மறுத்ததால் 1,000 டாலர் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்த முடியாத நிலையில், இந்தியாவிலிருந்து நேரடியாக மருந்துகளைப் பெற்றுத்தரும் கனடிய மருந்தகம் ஒன்றின் மூலம் மருந்துகளை ஆர்டர் செய்யுமாறு மருத்துவர் அவருக்கு மாற்று வழி காட்டியுள்ளார். அதன்படி விக்டோரியா ஆர்டர் செய்தபோது, அந்த மருந்தின் அசல் விலை வெறும் 10 டாலர் என்றும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கான கப்பல் கட்டணம் 15 டாலர் சேர்த்து மொத்தமாக வெறும் 25 டாலர் மட்டுமே ஆகியுள்ளது. அமெரிக்காவில் ரூ.94,000-க்கு விற்கப்பட்ட மருந்து இந்தியாவில் வெறும் ரூ.2,366-ல் கிடைத்ததால் அதிர்ச்சியடைந்த அவர், “அமெரிக்க சுகாதார அமைப்பு ஒரு கேலிக்கூத்து; இங்கு நாங்கள் வெளிப்படையாகச் சுரண்டப்படுகிறோம்” என வீடியோ வெளியிட்டு தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அமெரிக்க மருத்துவக் கட்டமைப்பின் மீதான மக்களின் கோபத்தையும், இந்திய மருத்துவத் துறையின் மீதான பாராட்டுகளையும் அறுவடை செய்து வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அமெரிக்காவின் மருந்துச் சந்தை முறையைக் கடுமையாக விமர்சித்து வருவதுடன், இந்திய மருந்தகங்களில் இந்த மருந்து இன்னும் மலிவாக, வெறும் ரூ.100-க்குள் கூட கிடைக்க வாய்ப்புள்ளது எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிலர், “அமெரிக்காவில் 1,000 டாலர் கொடுத்து மருந்து வாங்குவதற்குப் பதிலாக, இந்தியாவிற்கு விமான டிக்கெட் எடுத்து வந்து, ஒரு வாரம் சுற்றுலா முடித்துவிட்டு மருந்தையும் வாங்கிக் கொண்டு திரும்பினாலும் கூட அதைவிடக் குறைந்த செலவே ஆகும்” என்று அமெரிக்காவின் மோசமான மருத்துவச் சுரண்டலை நகைச்சுவையுடன் சாடி வருகின்றனர்.
