தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
90 களில் ரஜினி தன்னுடைய மாஸின் உச்சத்தில் இருந்தார். அப்போது அவர் அரசியல் சம்மந்தமான கருத்துகளையும் சொல்லி வந்ததால் அவர் படங்களில் வரும் மாஸ் வசனங்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன. அப்போது வளர்ந்து வரும் இயக்குனர்கள் அனைவருமே ரஜினிக்காக ஒரு கதையை எழுதி வைத்திருப்பார்கள்.
அப்படிதான் இயக்குனர் ஏ வெங்கடேஷும் ரஜினிக்காக ஒரு கதையை எழுதியுள்ளார். மாஸ் கதையான அதை எப்படியாவது ரஜினிக்கு சொல்லவேண்டும் என்று பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவரால் அந்த கதையை ரஜினியிடம் கொண்டு செல்லவே முடியவில்லையாம்.
அதனால் அந்த படத்தை சரத்குமாரை வைத்து எடுக்கலாம் என முடிவு செய்துள்ளார். ஆனால் அதுவும் நடக்கவில்லை. அதனால் சில ஆண்டுகள் அந்த கதையை மூட்டைக்கட்டி போட்டுவிட்டு வேறு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பிரசாந்தை வைத்து அந்த படத்தை இயக்கலாம் என முடிவு செய்து முயற்சி செய்துள்ளார். ஆனால் அப்போதும் நடக்கவில்லை. அதன் பின்னர்தான் ஒருவழியாக விஜய்யிடம் அந்த கதையை சொல்லி அவரின் சம்மதம் வாங்கி உருவாக்கியுள்ளார்.
ரஜினிக்காக உருவாக்கிய கதை என்பதால் ஏகப்பட்ட மாஸ் பில்டப்புகள் இருந்தன. ஆனால் அதை விஜய்க்கு ஏற்றவாறு மாற்றாமல் அப்படியே எடுத்ததால் அப்போது விஜய் வளர்ந்து வரும் நடிகர் என்பதால் அந்த படம் தோல்விப் படமாக அமைந்தது.
அந்த படம் எதுவென்று கேட்கிறீர்களா? விஜய் முழுக்க முழுக்க ஆக்ஷன் வேடத்தில் நடித்த படங்களில் ஒன்றான பகவதிதான் அந்த படம். இந்த படம் உருவான விதத்தை சமீபத்தில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.