தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் என நான்கு முனைப் போட்டி நிலவினாலும், தற்போதைய சூழலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடைபெற்ற விழாவில் பேசிய அவர், “ஜனநாயகனோ அல்லது பணநாயகனோ… அந்தப் படம் வெளிவந்தால் என்ன, வராவிட்டால் எனக்கு என்ன? அதனால் என் வீட்டில் சோறு பொங்கப் போகிறதா..? சினிமா மற்றும் பிக் பாஸ் போன்றவற்றைத் தான் கலாச்சாரச் சீர்கேடாகவே கருதுவதாகவும் சாடினார். மேலும், பச்சிளம் குழந்தைகள் பாலின்றித் தவிக்கும் நிலையில், நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்குப் பால் ஊற்றி வீணாக்குவதை ரசிகர்கள் கைவிட வேண்டும் என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
எடப்பாடி பழனிசாமியுடன் மேற்கொண்ட பயணத்தின்போது, அவர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 10.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்து நீண்ட நேரம் உரையாடியதாக வேல்முருகன் கூறினார். அதே சமயம், அரசு ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பாமகவின் கூட்டணி நிலைப்பாடுகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்க மறுத்த அவர், தேர்தல் நேரத்தில் கட்சிகள் இடங்களைப் பெறப் பல்வேறு யுக்திகளைக் கையாளும் என்றும், வேட்புமனுத் தாக்கல் வரை அரசியலில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாகவும் சூசகமாகத் தெரிவித்தார்.
