நடிகர் ரஜினிகாந்த், தான் ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்தபோதிலும், சலுகைகள் எதையும் பயன்படுத்தாமல், ரயில் பயணத்தின்போது சாதாரண பெட்டியில் சிவாஜி ராவ் என்ற பெயரிலேயே டிக்கெட் எடுத்து, மேல் படுக்கையில் படுத்துக்கொண்டு எளிமையாகப் பயணிப்பார் என்று இயக்குனர் பி.வாசு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
ஒருமுறை படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்தபோது, தயாரிப்பு நிறுவனம் அட்வான்ஸ் பணம் கொடுக்காததால், ஹோட்டல் மேலாளர் அறை சாவியைத் தர மறுத்ததால், பி. வாசு கோபத்தில், “நான் யார் தெரியுமா?” என்று சத்தம் போட்டு சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மேலாளரிடம் விசாரித்தபோது, ரஜினிக்கும் சாவி கொடுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
வாசு கோபத்தில் பேசி கொண்டிருந்த போது, அவரது தோளில் கைவைத்த ரஜினிகாந்த், “வாசு சார், நாம் யாரென்று நீங்கள் அவரிடம் சொல்லக் கூடாது. நாம் யாரென்று அவர்கள் நமக்குச் சொல்ல வேண்டும்” என்று கூறி, நம் ஆட்கள் தான் தவறு செய்திருக்கிறார்கள், அவர் தன் கடமையைச் செய்கிறார் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
நாம் நம்மைப் பற்றிப் பெருமை பேசுவதைவிட, மற்றவர்கள் நம்மை அடையாளம் கண்டு பாராட்டுவதே உண்மையான சந்தோஷம் என்ற பாடத்தை அன்று ரஜினிகாந்திடம் இருந்து கற்றுக்கொண்டதாக இயக்குநர் பி. வாசு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
