சொத்துத் தகராறிலும் வாடகை பணப் பிரச்சினையிலும் ஓய்வுபெற்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் சொந்தக் குடும்பத்தாலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வாலாஜாபாத் அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருதம் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான சிவபாதம் என்பவருக்குச் சொந்தமாகச் சென்னையில் பல வீடுகள் உள்ளன. அவற்றிலிருந்து வரும் வாடகைப் பணத்தை வைத்துதான் குடும்பம் நடந்து வந்தது. சிவபாதத்திற்குச் சர்க்கரை நோய் இருந்ததால், மருந்து மாத்திரைகளுக்காகப் பணம் தேவைப்பட்ட நிலையில், சென்னை வீடுகளின் வாடகை பணத்தைத் தருமாறு மனைவி ரேணுகா மற்றும் பொறியியல் படித்த மகன் மதுசூதனனிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் பணத்தைத் தர மறுத்ததால் குடும்பத்தில் நாளுக்கு நாள் தகராறு முற்றியுள்ளது.
வறுமை மற்றும் பணப் பற்றாக்குறை காரணமாகக் கடன் வாங்கிச் செலவு செய்து வந்த சிவபாதம், சென்னை திரும்ப மறுத்துச் சொந்த ஊரிலேயே தங்கியிருந்தார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர், “எனக்குச் செலவுக்குப் பணம் தராவிட்டால், என் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தையும் உறவினர்களுக்கும் அனாதை ஆசிரமத்திற்கும் எழுதி வைத்து விடுவேன்” என்று எச்சரித்துள்ளார். சொத்து கைநழுவிப் போய்விடுமோ என்ற பயமும் ஆத்திரமும் அடைந்த மனைவியும் மகனும், சிவபாதத்தைக் கழற்றிவிட முடிவு செய்து அதற்குரிய சதித்திட்டத்தைத் தீட்டினர்.
சம்பவத்தன்று அதிகாலையில் வீட்டின் மொட்டை மாடியில் சிவபாதம் தூங்கிக் கொண்டிருந்தபோது, மீண்டும் அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது. இதில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற தாய்-மகன் இருவரும் சேர்ந்து, அரிவாளால் சிவபாதத்தின் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சிவபாதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலைக்குப் பிறகு, விடியும் முன்பே மொட்டை மாடியில் இருந்த ரத்தக் கரைகளைச் சுத்தம் செய்த ரேணுகா, பொழுது விடிந்ததும் சிவபாதம் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறி உறவினர்களை நம்ப வைக்க நாடகமாடியுள்ளார்.
எனினும், சிவபாதத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வாலாஜாபாத் காவல் நிலையத்திற்குச் ரகசியத் தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ரேணுகா மற்றும் மதுசூதனனிடம் நடத்தப்பட்டக் கிடுக்கிப்பிடி விசாரணையில், சொத்துக்காகச் சிவபாதத்தைக் கொலை செய்துவிட்டு மாரடைப்பு என நாடகமாடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் வேலூர் சிறையில் அடைத்தனர். பெற்ற தந்தையையே சொத்துக்காகக் கொலை செய்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
