தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது.
அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இப்படியான நிலையில் 2026 தேர்தல் தொகுதி பங்கீடு ஸ்டாலினுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. கூடுதல் தொகுதிகள் கேட்க மதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த வரிசையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது. கடந்த முறையை விட இரண்டு மடங்கு தொகுதிகளை திமுக கூட்டணியில் கேட்டு பெற விசிக முடிவு செய்துள்ளதால் ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
