அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுடனான ராணுவ மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்துள்ள நிலையில், தனது அதிரடிப் பேச்சால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். “பைத்தியக்காரர்களின் கையில் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது” என்று காரசாரமாகப் பேசிய அவர், ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தடுத்தது உலகப் பாதுகாப்பிற்கு அவசியம் என வாதிட்டார். அமெரிக்க விமானப்படையின் துல்லியமானத் தாக்குதலால் ஈரானின் கடற்படை மற்றும் வான் பாதுகாப்புத் திறன்கள் முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டதாகக் கூறிய ட்ரம்ப், தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி ஆதரவாளர்களிடம் பலத்த கைத்தட்டல்களைப் பெற்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் மூலம் முன்வைக்கப்பட்ட புதிய ஒப்பந்தங்களை ட்ரம்ப் அதிரடியாக நிராகரித்துவிட்டார். ஈரானியத் தலைமை பிளவுபட்டுக் குழப்பத்தில் இருப்பதாகவும், தற்காலிகச் சமாதானத்தால் எதிர்காலத்தில் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்படுவதைத் தான் விரும்பவில்லை என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதேநேரம், வாஷிங்டன் தனது ஆக்ரோஷமான போக்கைக் கைவிட்டால் மட்டுமே ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு இடமுண்டு என ஈரான் பதில் அளித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் ஓய்ந்தாலும், அரசியல் ரீதியான பதற்றம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
