வங்காளதேச தலைநகர் டாக்காவை சேர்ந்த அக்லிமா அக்தர்(32) என்ற இளம் பெண் நுரையீரல் புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்துள்ளார். அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று தனியார் விமான மூலமாக அவர் சென்னைக்கு பயணித்த நிலையில் தாத்தாவிலிருந்து சென்னை நோக்கி விமானம் பறந்து கொண்டிருந்தது. அப்போது நடுவானில் அந்த பெண்ணுக்கு திடீரென்று கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த விமான பணிப்பெண்கள் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த விமானி உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு பயணிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதால் மருத்துவக் குழுவை தயார் நிலையில் வைத்திருக்க கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் மருத்துவ குழுவினர் உடனடியாக விமானத்திற்குள் சென்று அந்தப் பெண்ணை பரிசோதனை செய்தனர். ஆனால் விமான இருக்கையில் சாய்ந்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. மாரடைப்புதான் அவருடைய மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் உடனே விமான நிலையம் விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
